சபரிமலை ஐயப்ப சுவாமி சன்னிதானத்தில் 2 நாட்களில் 100 தங்க டாலர்கள் விற்பனை
சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாளில் 100 டாலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்தனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ஐயப்ப சுவாமி உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருந்தது. இதன்படி, சபரிமலையில் நேற்று முன்தினம் விஷு பண்டிகை தினத்தை முன்னிட்டு விற்பனை தொடங்கியது. சன்னிதானம் முன்புள்ள கொடிமரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் விற்பனையைத் தொடங்கிவைத்தார். முதல் டாலரை ஆந்திராவைச் சேர்ந்த மணிரத்னம் என்ற பக்தர் பெற்றுக் கொண்டார். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, தேவசம்போர்டு தலைவர் பிஎஸ்.பிரசாந்த், உறுப்பினர் ஏ.அஜிகுமார், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறி்த்து தேவசம்போர்டு அதிகாரிகள் கூறும்போது, "இந்த டாலரின் தரம் உறுதி செய்யப்பட்டு, 916 தர முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டாலருமே சந்நிதானத்தில் பூஜை செய்த பிறகே விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் வரிசைப்படி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2 கிராம் டாலரின் விலை ரூ.19,300, நான்கு கிராம் டாலர் ரூ.38,600, 8 கிராம் டாலர் ரூ.77,200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இவற்றைப் பெறலாம். முதல் இரண்டு நாளில் 100 பக்தர்களுக்கு இந்த டாலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
No comments