• Breaking News

    சபரிமலையில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஐயப்ப சுவாமி உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை

     


    மலையாள புத்தாண்டு தினமான வரும் 14-ம் தேதி முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஒவ்வோர் ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு விழா இன்று (ஏப். 11) நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 1-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையாள ஆண்டுப் பிறப்பான விஷூ பண்டிகை தினமான ஏப். 14-ம் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

    இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இச்சேவை நிறுத்தப்பட்டது. இதை தொடர வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். எனவே, 1, 2, 4, 6, 8 கிராம்கள் என 5 வகையான டாலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இவற்றை வடிவமைத்துத் தந்துள்ளன. இதன் தரம் உறுதி செய்யப்பட்டு, 916 தர முத்திரையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.மலையாளப் புத்தாண்டான விஷூ தினத்தன்று சபரிமலையில் இந்த டாலர்கள் விற்பனை தொடங்க உள்ளது.

     ஆன்லைன் மற்றும் தேவசம்போர்டு அலுவலகத்திலும் பணம் செலுத்தி இவற்றை வாங்கிக் கொள்ளலாம். சந்நிதானத்தில் பூஜை செய்த பிறகு இந்த டாலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்" என்றார்.இந்நிலையில், புனித நீராடலுக்காக உற்சவ மூர்த்தி இன்று பம்பை வர உள்ளார். எனவே, சந்நிதானத்தில் காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மீண்டும் இரவு 8 மணிக்கு சந்நிதானத்தில் தரிசனம் தொடங்கும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

    No comments