• Breaking News

    ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..... இதில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....


    கொல்லிமலையில் உள்ள நட்சத்திர விடுதியில், 03.04.2025 அன்று தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்  தாரை திருஞானம், அன்பழகன், மற்றும் YBM தாஜுதீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வழிநடத்தினர்.


    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இதில் பின்வரும் முக்கிய 10 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

     தீர்மானங்கள்:

    01. சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு:

    நான்கு, ஆறு, எட்டு வழிச் சாலைகளில் உள்ள 1228 சுங்கச் சாவடிகளில், ஆம்னி பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.


    02. தனி வகை பர்மிட்:

    ஆம்னி பேருந்துகளுக்கென்று தனி வகை பர்மிட் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    03. ஒரே நாளில் பதிவு:

    தமிழகத்தில் ஒரு மாதமாகும் பதிவு நேரத்தை, மற்ற மாநிலங்களைப் போல் ஒரே நாளில் செய்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.


    04. ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் அனுமதி:

    2021 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பர்மிட்டை தமிழகமும் அனுமதிக்க வேண்டும்.


    05. அபராத கட்டண மோசடி ஒழிப்பு:

    சாலை வரியை ஏற்கனவே அதிகம் செலுத்தும் ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் விதிக்கும் அபராதங்களைத் திரும்ப பெற வேண்டும்.


    06. ஆன்லைன் சேவைகள்:

    போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக விரைவாக செய்ய வசதி செய்ய வேண்டும்.


    07. செக் பாயிண்ட் அகற்றல்:

    மோட்டார் வாகன செக் போஸ்ட்களை அகற்றி அந்த ஊழியர்களை போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாற்ற வேண்டும்.


    08. அபராதம் ஓட்டுநருக்கு மட்டுமே:

    வாகனத்திற்கு பதிலாக, ஓட்டுநர் உரிமத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும்.


    09. ஆன்லைன் அபராத செலுத்தும் வசதி:

    அபராதங்களை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.


    10. சுங்கச்சாவடிகளில் தனிச்சாலை:

    பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் தனிச்சாலை ஏற்படுத்த வேண்டும்.

    மாநிலச் செயலாளர் திரு தாரை திருஞானம் அவர்கள், “பயணிகள் சேவையை மேம்படுத்தவும், உரிமையாளர்களின் நீண்டகால பிரச்சனைகளை தீர்க்கவும் இத்தீர்மானங்கள் முக்கிய பங்காற்றும்,” எனக் குறிப்பிட்டார்.

    No comments