திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அடுத்த கரடி புத்தூர் கிராமத்தில் சர்வே எண் 51/1-ல் அடங்கிய கல்லாங்குத்து அரசின் இடத்தில் செயல்படும் மண்குவாரியின் உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தியும், கரடி புத்தூர் கல்லாங்குத்து அரசு நிலத்தை கிராம பூர்வ குடி மக்களுக்கு வீட்டுமனையாக பிரித்து பட்டா வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வருவாய் மற்றும் காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அப்பகுதி மண் எடுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று வருகின்றனர்.மேலும் போராட்டம் நடத்திய அப்பகுதி தலீத் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தனர்.
இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.கரடிப்புத்தூர் கிராம மக்களுக்கு பட்டா வழங்க கோரியும், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளும் திட்டத்தை கைவிட கோரியும் போராட்டம் நடத்திய பெண்கள் மீது பதிந்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments