மலைப்பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு அனுமதி பெற இணையதளம் துவக்கிய வனத்துறை
தனியார் நிலங்களில், தேக்கு, சந்தனம், செம்மரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட, விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
இதன்படி, தனியார் நிலங்களில், இந்திய வனச்சட்டத்தின்படி பட்டியலிடப்பட்ட மரங்களை வளர்ப்போர், அவற்றை வெட்ட, வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல, மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான ஆன்லைன் வசதி, சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதில், சமவெளி பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, ஏற்கனவே உள்ள ஆன்லைன் வசதி பொருந்தாது.
இந்நிலையில், மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் அதிமுக்கியமான மரங்களை வெட்டுவதற்கும், எடுத்து செல்வதற்கும் ஆன்லைன் முறையில் அனுமதி வழங்குவதற்காக, 'மலைத்தளம்' என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், குன்னுார், ஊட்டி நகராட்சிகள், கோத்தகிரி ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி, சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, இந்த வசதி பொருந்தும்.
இப்பகுதிகளில், பட்டியலிடப்பட்ட மரங்களை வளர்ப்போர், ஆரம்ப நிலையில் இருந்தே வனத்துறைக்கு தகவல் தர வேண்டும். அதிகாரிகள், அதை கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, இங்கு மரங்கள் வெட்டுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கும். இது தொடர்பான அனைத்து பணிகளும், 'மலைத்தளம்' இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments