இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யுங்கள்..... நீலகிரியில் ஏப்ரல் 2-ல் முழு அடைப்பு போராட்டம்......
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சுற்றுலா நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பாரூக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தும் போராட்டமும், ஏப்ரல் 2-ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
No comments