பாகிஸ்தான் ரயிலில் கடத்தப்பட்ட 104 பேர் மீட்பு..... 16 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 


நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், சிலரை விடுவித்துவிட்டு, 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அவர்களை மீட்கும் பணியில் பாக்., ராணுவம் ஈடுபட்டுள்ளது. ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மோதலுக்கு இடையே பெண்கள் 31 பேர், குழந்தைகள் 15 பேர் உட்பட 104 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments