நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்.... புகார் எண்ணை அறிவித்த வாணிப கழக இயக்குனர்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரத்துடன் தனது மொபைல்போன் எண்ணிற்கு புகாரை அனுப்பலாம்' என, தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
அரசு சார்பில் மாநிலம் முழுதும் 2,600 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்படுகின்றன. தினமும், 12,800 விவசாயிகளிடம் இருந்து, 60,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதற்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சில நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வருகின்றன.
இதைத்தடுக்க, சென்னையில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உழவர் உதவி மையம் துவக்கப்பட்டு உள்ளது.இந்த மையத்தை, 18005993540 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவசாயிகள் புகார் அளிக்கலாம்.
அத்துடன், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள, மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோரின் மொபைல் போன் எண்களை தொடர்பு கொண்டும், விவசாயிகள் புகார்கள் தெரிவிக்கலாம்.தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், கூடுதல் பதிவாளர் நிலையில், பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டின் கீழ், எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புகார்கள் அடிப்படையில், இக்குழு தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுக்கோட்டை கரம்பக்குடி, விலாப்படி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில், பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன. அதுபற்றி குழு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிக பணியாளர்கள் மீது புகார்கள் எழுந்து, உண்மை கண்டறியப்பட்டால், உடனுக்குடன் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர். நிரந்தர பணியாளர்களை பொறுத்தவரை, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
எனவே, யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. புகார் இருந்தால், தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனரின் 9445257000 என்ற மொபைபோன் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியாக மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்கள் அல்லது வீடியோ இருந்தால் அவற்றையும் பதிவிடலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments