டப்பிங் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எல்லாம் உதயநிதிக்கு தான் தேவைப்படுகின்றது - அண்ணாமலை விமர்சனம்
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் டெக்னோ பார்க் வளாகத்தில் ரோட்டரி கிளப் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமெரிக்காவில் 100 மிகப்பெரிய நிறுவனங்கள் இருக்கின்றது. அதனால் அங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் சீனா அண்டை நாடாக இருப்பதால் பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளோம். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் விஷயத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
29 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள நிலையில் 7.50 லட்சம் பேர் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பதாக அமெரிக்கா சொல்கிறது. அமெரிக்கா சட்டதிட்டங்கள் படி அமெரிக்காவிற்குள் மெக்ஸிகோவில் இருந்து சட்ட விரோதமாக நுழைய முயன்றவர்கள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகள் செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து 2 1/2 மடங்கு முதல் மூன்று மடங்கு வரை நிதி ஒதுக்குவது அதிகரித்துள்ளது.
எந்த அடிப்படையில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் என தெரியவில்லை. மத்திய பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி டப்பிங் கொடுத்து வருவதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆனால் முதல்வருக்கு தான் இன்று டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலை போல அறிவாலயத்தில் இருந்து பல பேர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவுக்கு எங்கேயும் டப்பிங் கிடையாது. அதனைப் போலவே டப்பிங் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எல்லாம் உதயநிதிக்கு தான் தேவைப்படுகின்றது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
No comments