• Breaking News

    திருக்குவளை அருகே ஆதமங்கலத்தில் பழுதாகி சாலையோரம் நின்ற அரசு பேருந்து: மாணவர்கள் அவதி


    திருக்குவளை அருகே ஆதமங்கலம் பகுதியில் புதன்கிழமை பழுதாகி நின்ற அரசு பேருந்து காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.திருவாரூரிலிருந்து மாவூர், வேப்பத்தாங்குடி, ஆதமங்கலம், சாட்டியக்குடி,வலிவலம், கொளய்பாடு, திருக்குவளை, எட்டுக்குடி வழியாக தலைஞாயிறு வரை பல்வேறு கிராமப்புறங்கள் வழியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 18 என்ற என்ற கொண்ட நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தபேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள், வணிகர்கள், பொது  மக்கள் என தினசரி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு செல்வோரும் இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். 

    தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ( பேருந்து எண்: TN68 N.0261)மிகவும் பழைய பேருந்தாக உள்ள நிலையில் அடிக்கடி பழுதாகி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி பழுதாகி சாலையின் ஓரத்தில் இருப்பதால் பலரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

    இந்நிலையில் வழக்கம்போல் திருவாரூர் நோக்கி புதன்கிழமை மாலை சென்ற பேருந்து ஆதமங்கலம் அருகே பழுதாகி பேருந்தில் இருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதிக்கு ஆளாகினர். மாற்றுப் பேருந்து ஏதும் ஏற்பாடு செய்யாத நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் உட்பட பலரும் வெகு நேரம் காத்திருந்து பின்னர் ஆட்டோவிலும் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மூலமாகவும் மாவூர் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து பலமுறை ஏற்கனவே புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆகவே இந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்தினை சீர் செய்து தருவதோடு புதிய பேருந்து இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments