• Breaking News

    பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்..... அண்ணாமலை கண்டனம்

     


    சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை; சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீஸ் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.

    அரசின் மீதோ, போலீசாரின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதல்வர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

    தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளி வருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், போலீசார் தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தி.மு.க., அரசும், போலீசாரும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொது மக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    No comments