எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.... டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசுசாரா துறை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்த துறையின் தலைவராக உள்ளார்.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதே டிரம்பின் நோக்கமாக இருக்கிறது.சமீபத்தில் தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதம் ஊதியம் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு அமெரிக்கா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எரிசக்தி துறையில் 1,200 முதல் 2 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
அதேபோல், அமெரிக்கா அணு ஆயுதக் குழுவை நிர்வகிக்கும் மற்றும் உலகம் முழுவதும் கதிரியக்கப் பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 325 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
அத்தியாவசியமான தேவைக்கான ஊழியர்களை மட்டும் பணியில் வைத்து இருக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசு ஊழியர்களுக்கு நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
No comments