ரூ.1.50 கோடி சொத்து.... 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்த பலே மோசடி மன்னன் கைது
மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு கிரயம் பெற்று வாங்கியுள்ளார்.
இந்த இடத்தை கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை திருவொற்றியூரை சேர்ந்த செல்வ நாதனின் மகன் தமிழ்ச்செல்வன் (42) கோடீஸ்வரிக்கு தெரியாமல் அபகரித்துள்ளார். தமிழ்ச்செல்வன் இந்த இடத்திற்கு சொந்தமான கோடீஸ்வரி இறந்து விட்டதாக போலி சான்று தயாரித்து உள்ளார். மேலும் கோடீஸ்வரியின் வாரிசாக சௌபாக்கியவதி, அம்சவேணி ஆகிய இரண்டு பெண்களை நடிக்க வைத்து அவர்களுக்கு போலி வாரிசு சான்றிதழையும் தயாரித்துள்ளார்.
இதன்பின் நடிக்க வைத்த இரண்டு பெண்களின் மூலம் தனது பெயருக்கு 3600 சதுர அடி கொண்ட காலி இடத்தை சென்னை திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரப்பதிவு செய்து உள்ளார். இதன் மூலம் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நிலத்தை தமிழ்ச்செல்வன் தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
இதேபோன்று மீஞ்சூர் ரமணா நகரில் வசித்து வருபவர் தசரதன் (65). இவர் வெள்ளிவாயில்சாவடியில் 7 ஏக்கர் 52 சென்ட் இடத்தை தனது பெயரிலும் தனது மனைவி விஜயலட்சுமி என்பவரின் பெயரிலும் கிரயம் பெற்று முறையுடன் பட்டாவும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தசரதனின் மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக தமிழ்ச்செல்வன் போலி சான்றிதழ் தயாரித்து. பின்னர் தசரதன் என்ற பெயரில் ஆள் மாறாட்டம் செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு தனது பெயருக்கு திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரத்தையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு இரண்டு மோசடிகளிலும் சுமார் ₹ 1.50 கோடி மதிப்பிலான நிலங்களை தமிழ்ச்செல்வன் அபகரித்துள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு புகார்கள் பெறப்பட்டன. இந்த புகாரின் பேரில் ஆவடி காவல் ஆணையகரத்தின் குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரி வள்ளி தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தமிழ்செல்வன் மீது போலி இறப்பு சான்று தயாரித்தல், ஆள் மாறாட்ட நபர்கள் மூலம் ரூபாய் 1.50 கோடி மதிப்பிலான நில மோசடி செய்தல் போன்ற குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நில மோசடி புலனாய்வு பிரிவு காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments