• Breaking News

    வடசென்னை அனல் மின் நிலையத்தில் குண்டு வைக்க ஐ.எஸ் பயங்கரவாதி திட்டம்

     


    சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல தங்கி இருந்த, மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலை சேர்ந்த அல் பாசித்,42, நேற்று முன் தினம், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அவர் தங்கி இருந்த இடம் மற்றும் திருமுல்லைவாசலில் உள்ள கூட்டாளிகள் வீடு என, 20 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் டிஜிட்டல் ஆவணங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. அதன் வழியே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், தமிழக பிரிவு தலைவராக செயல்பட்ட அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், பயங்கரவாதி இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் ஹாஜா பக்ருதீன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

    அல்பாசித் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சர்ச் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

    என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில்,'அல்பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிக்க வைத்து, 250க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய, சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளனர். ஆயுத பயிற்சியும் பெற்றுள்ளனர். அல்பாசித் உள்ளிட்டோரின் சதி திட்டங்கள் குறித்து தொடர் விசாரணை நடக்கிறது' என்றனர்.

    No comments