விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளோம்; சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தெரிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகினர். விசாரணையில் இருதரப்பும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து தீர்ப்பு நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments