வேலையில் சேர ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்..... ஆனால் ஒரு வருடத்திற்கு சம்பளம் கிடையாது..... சொமேட்டோ அறிவிப்பு
புது விதமான நிபந்தனைகளுடன் சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ளார்.ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணியில் இருக்கும் சொமேட்டோவில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தீபிந்தர் கோயல் செயல்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். ஆனால், இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில கண்டிசன்களையும் போட்டுள்ளார்.அதாவது, இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதேபோல, அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா (FEEDING INDIA) அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அதன்பிறகு, 2வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீபிந்தர் கோயல் விடுத்துள்ள பதிவில், 'இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது. கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள், சொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சொமேட்டோ நிறுவனத்தின் இந்த புதுவிதமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
No comments