• Breaking News

    வயநாடு நிலச்சரிவில் அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு


    கேரள மாநிலம் வயநாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு நாட்களாக நடந்த மீட்புப் பணிகளில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, 206 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    அதே நேரத்தில், 219 உடல்களும், 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன; 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண முடியாத உடல்களுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, வயநாட்டின் புதுமலை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களில், அடையாளம் தெரியாத ஆறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இதைத் தவிர, 29 உடல்கள் மற்றும் 85 உடல் உறுப்புகளும் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளன. அனைத்து மத பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த உடல்கள் மற்றும் உடல் உறுப்புகள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, ஆறாவது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணி நேற்றும் நடந்தது.வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக செல்லும் சாலியாறு நதியின், 40 கி.மீ., துாரப் பகுதிகளில் பல உடல்கள் கிடைத்துள்ளன. அதனால், நதியின் பாதையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

    நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகியவை, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அங்கு தேடுதல் வேட்டையில் மீட்புப் படையினர் தனித்தனி குழுவாக பிரிந்து ஈடுபட்டனர்.எந்த பகுதியில், உடல்கள் மீட்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதோ, முதலில் அங்கு தேடுதல் பணி நடக்கும் என, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேற்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவு தொடர்பான தற்போதைய நிலை, ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்து மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், பிரதமர் மோடியிடம் நேற்று அறிக்கை அளித்தார்.

    No comments