• Breaking News

    தருமபுரம் ஆதீனத்திற்கு சமயபுரத்திலிருந்து தானமாக வழங்கப்பட்ட யானை..... சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மடத்தின் வசம் ஒப்படைப்ப்பு


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம் சீர்காழி சட்டநாதர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு புகழ்பெற்ற ஆலயங்கள் இந்த ஆதீன திருமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தருமபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்கப்பட்டு வந்த நளன் என்ற யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் யானை புதிதாக வாங்குவதற்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார். 

    இந்நிலையில் சமயபுரத்தை சார்ந்த சங்கர் என்பவர் தான் வளர்த்து வந்த 34 வயதான யானையை மடத்திற்கு தானமாக வழங்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து அரசின் அனுமதி உத்தரவுகள் பெற்ற நிலையில் யானையை மடத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு தருமபுரம் ஞானாம்பிகை என்று பெயர் சூட்டப்பட்ட யானை தருமபுரம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்கள், தேவார பாடல்கள் முழங்க ஒட்டகம் குதிரை பசு முன்னே செல்ல மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக மடத்தில் அமைந்துள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

    தொடர்ந்து யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனையுடன் கஜ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் யானைக்கு பழங்கள் கொடுத்து மடத்தில் இணைத்துக் கொண்டார். 

    ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் தர்மபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் கண்ணப்ப சிவாச்சாரியார், ஆதீனத்தின் தலைமை பொது மேலாளர் ரெங்கராஜன், யானையின் உரிமையாளர் சங்கர், கல்லூரி முதல்வர் சங்கர், கட்டளை தம்பிரான் சுவாமிகள், பங்கேற்றனர் திருக்கடையூர் அர்ச்சகர் மகேஸ்வரன் குருக்கள் யானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வைத்தார்.

    No comments