மதுவினால் குடும்பத்தில் தகராறு..... எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. அதனால் இவர் அவ்வப்போது மது குடித்துவிட்டு மனைவியோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி கடந்த 3 வருடங்களாக தன் குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் சனில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்திவிட்டு தனியாக வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உறவினர் ஒருவர் சனிலை செல்போனில் அழைத்துள்ளார்.
ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சனிலின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டாமல் திறந்து கிடந்தது. உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சனில் கட்டிலில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த உறவினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments