முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன...?
2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மூத்த குடிமக்கள், சாமானிய மக்கள் என அனைவரும் தங்களுக்கேன்ற சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்த பட்ஜெட்டில் சில எதிர்பார்ப்புகளை முன் வைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2024-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் சில முக்கியமான விஷயங்களை எதிர்பார்த்து அவை நிறைவு செய்யும் என்று நம்புவதாக போஸ்ஸ்ட்டைப் பதிவிட்டுள்ளார்.'
அந்த போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையோடு சேர்த்து நாக்பூர், பெங்களூர், கொச்சி போன்ற மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு சென்னையில் உள்ள மெட்ரோவுக்கு மட்டும் நிதி ஒதுக்காமல் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஸ்டாலின் இதுபோன்ற போஸ்டை பதிவிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகளை போல முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் சில எதிர்பார்ப்புகளை முன்மொழிந்து உள்ளார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் சாமானிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவருக்கும் உதவிகரமானதாக இருக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பும் கூட.
No comments