• Breaking News

    மீனவர்களை மீட்டுத்தாருங்கள்..... பாம்பன் பாலத்தில் சாலை மறியல்

     

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 22ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனிடையே இன்று அதிகாலை 25 ராமேஸ்வரன் மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தற்போது காங்கேசன் துறை முகாமில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்ய இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை கண்டிக்கும் வகையில் இன்று பாம்பன் பாலத்தில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பெண்கள், பாலத்தின் மீது சாலையில் முழங்காலிட்டு அமர்ந்து மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். 

    மேலும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சக மீனவர்கள் கண்டன முழக்கங்களையும் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமேஸ்வரம் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கடல் மணல் பரப்பில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கைது சம்பவங்களால் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவதால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    No comments