கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கேரளாவில் ‘நிபா வைரஸ்’ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறிப்பிட்டுள்ளதாவது ;
"காய்ச்சல் , தலைவலி , மயக்கம், சுவாசப் பிரச்னை, மனநலப் பிரச்னை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
கிணறுகள், குகைப்பகுதிகள் , தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
நோயாளிகளை பரிசோதிக்கும் சுகாதாரத்துறையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும்.
ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும்.
நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments