மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் தகன எரிவாயு சுடுகாட்டில் ஒரு மாதமாக தண்ணீர் இல்லை...... நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை
மயிலாடுதுறை நகரத்தில் நான்கு சுடுகாடுகள் இருக்கின்றன. அதில் எரிவாயு தகனமேடை சுடுகாடு ஒன்றாவது வார்டு பகுதியில் தீப்பாய்ந்தம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பெரிதும் பயன்பெற்று வரும் எரிவாயு தகனமேடை சுடுகாட்டில் கொரானா காலத்தில் நூற்றுக்கணக்கான பிரேதங்களை மயிலாடுதுறை மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன.
தற்போது இச்சுடுகாட்டை தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகின்ற பொழுதிலும் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகமே செய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடும் கோடையின் காரணமாக இச்சுடு காட்டில் இருக்கின்ற நீர்மூழ்கி மோட்டார் இயங்காத காரணத்தினால் பூமியில் நிலத்தடி நீர் அடிமட்டத்திற்கு சென்றதாலும் போர்வெல் குழாயில் மணல் அடைப்பு ஏற்பட்ட காரணத்தினாலும் தண்ணீர் இல்லாமல் போனது. தற்போது சுடுகாட்டிற்கு பிரேதத்துடன் வருபவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகி நிற்கின்றார்கள்.
மிக முக்கியமான மனிதனின் இறுதி சடங்குகள் நடைபெறும் இப் பகுதியில் ஏற்பட்டுள்ள இப் பிரச்சனை குறித்து உடனடியாக தனி கவனம் செலுத்தி இறுதிச் சடங்கிற்கு வருகின்றவர்கள் குளிப்பதற்கும் ஈம காரியங்கள் செய்வதற்கும் தேவையான தண்ணீரை போதிய அளவு உடனே வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுத்திட நகராட்சி ஆணையரை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments