• Breaking News

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டியிருக்கும்..... மத்திய அமைச்சர் ஆவேசம்

     


    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். இதனை ‘இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில், நாட்டில் அச்சத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே இன்று சாடியுள்ளார். ரியாசி பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ராம்தாஸ் அதவாலே, மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் நேற்றைய தினம் சக அமைச்சகர்களுடன் இணைந்து பதவியேற்றுக் கொண்டவர்.

    ரியாசி மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய அதவாலே, ”ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கும் போது, நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தவே இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாயிலாக அதிக பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பும் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்க வேண்டியிருக்கும்” என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார்.ஜூன் 9 அன்று, ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். 

    ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் குறுக்கிட்டனர். பக்தர்கள் பயணித்த 53 இருக்கைகள் கொண்ட பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.தாக்குதலுக்குப் பிறகு, கத்ரா, தோடா நகரம் மற்றும் கதுவா மாவட்டம் உட்பட ஜம்மு பகுதி முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அழைப்பும் விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் திட்டமிட்டு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழி செய்யும் பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினர்.

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    No comments