டெல்லியை அலறவிட்ட இமெயில்..... 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.....
டெல்லியில் ஜிடிபி மருத்துவமனைக்கு அருகில் உள்ள மாநில புற்றுநோய் நிறுவனம், டாப்ரியில் உள்ள தாதா தேவ் மருத்துவமனை, ஹட்ஹேவர் மருத்துவமனை, தீப் சந்த் பந்து மருத்துவமனை ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் இன்று காலை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை வளாகங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கடந்த 1-ம் தேதி சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதன் காரணமாக, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதி ஏற்பட்டது.ஜெய்ப்பூரில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன. இதையடுத்து குழந்தைகள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டு வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் அது போலியாக விடுக்கப்பட்ட மிரட்டல் என்பது தெரியவந்தது.
வட மாநிலங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments