• Breaking News

    கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது....... அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு



    உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா இம்மாதம் 22-ம் தேதியன்று  நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை  உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


    சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கைத் தடை செய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த போலா தாஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


    அவரது மனுவில், அயோத்தியில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்து மாதங்களில் ஒன்றான 'பவுஷ்ய' மாதத்தில் எந்த மத நிகழ்வுகளும் நடத்தப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் கோயில் கட்டுமானம் இன்னும் முழுமையடையாமல் உள்ளதாகவும், முழுமையடையாத கோயிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது என்றும்  கூறப்பட்டுள்ளது. இந்த விழாவை மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நடத்துவதாகவும்  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


    பரபரப்பை கிளப்பியுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும்  பாஜகவினர் இந்த மனுவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    No comments