மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி - மாயாவதி திட்டவட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வறுமையை போக்குவதற்கு பதிலாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசங்களை கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றன. எங்களது அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை.” என்றார்.
மேலும், “கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம். இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தணித்து போட்டியிடும். வாய்ப்பு இருந்தால் தேர்தலுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்” என்று தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் நேரடியாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. மாநிலங்களில் உள்ள பாஜகவின் எதிர்க்கட்சிகளை இணைத்து காங்கிரஸ் கட்சி இந்தியா என்ற பெயரில் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. இதுவரை 4 முறை இந்த கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இரு கூட்டணிகளிலும் இணைய போவதில்லை என மாயாவதி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனித்து தான் போட்டி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments