• Breaking News

    மீன் வியாபாரிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

     


    கேரளாவில் மீன் வியாபாரி ஒருவர் 5 லாட்டரிகள் வாங்கிய நிலையில், ஒரு லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாயும், மீதமுள்ள 4 லாட்டரிகளுக்கு தலா ரூ.8 ஆயிரமும் பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


    தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள போதும், கேரளாவில் லாட்டரி சீட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை லட்சக்கணக்கானோர் வாங்கும் நிலையில், அவ்வப்போது சிலருக்கு லட்சக்கணக்கிலும், கோடிகளிலும் பரிசுகள் விழும். அந்த வகையில் தற்போது, மீன் வியாபாரி ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



    பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவழியோடு பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான மஜீத் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வருகிறார். ஆனால் அவருக்கு ஒருமுறை கூட சிறிய பரிசு கூட விழுந்ததில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நென்மாரா பகுதிக்கு மீன் விற்க சென்றிருந்த போது, அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த செந்தாமரை என்பவரிடமிருந்து 5 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். டிக்கெட்டுகள் வாங்க காசில்லாததால் முன்பணமாக ரூ.10 மட்டும் கொடுத்துவிட்டு, மீன் விற்பனை செய்த காசில் மீதி ரூ.240 ஐ கொடுத்துள்ளார்.



    இந்நிலையில் இந்த லாட்டரி சீட்டுகளின் குலுக்கல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், மஜீத் வாங்கியிருந்த ஒரு லாட்டரி சீட்டிற்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவர் வாங்கியிருந்த மற்ற 4 சீட்டுகளுக்கும் தலா ரூ.8 ஆயிரம் வீதம் பரிசு விழுந்துள்ளது. இதையடுத்து, லாட்டரி சீட்டை நேற்று அவர் வங்கியில் செலுத்தியதை அடுத்து இந்த தகவல் வெளியாகி, கேரள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    No comments