திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பதியில் நேற்று 72,3 09 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
No comments