எங்களுக்கு உதவி தேவை இல்லை.... வலுவான ஆதரவுதான் தேவை..... இந்தியாவிடம் இஸ்ரேல் வேண்டுகோள்
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் மோதலில் இந்தியாவின் வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு தேவை என அந்நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், "நாங்கள் போதுமான அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்றும், எங்களுக்கு உதவி தேவையில்லை. உங்களது ஆதரவு தான் தேவை" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி கூறியுள்ளார்.
இருநாட்டுக்கும் இடையே பிரச்சினையாக உள்ள காஸா பகுதி தற்போது பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ள நிலையில் பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது.
இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று காலை இஸ்ரேல் நாட்டை நோக்கி ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதனால் இஸ்ரேலில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான மோதலில் மேற்கத்திய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் எனத் தெரிகிறது. இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி, இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி, "எங்களுக்கு உதவி தேவை இல்லை, ஆதரவுதான் தேவை" என்று கூறியுள்ளார். "நாங்கள் போதுமான அளவுக்கு வலுவாக இருக்கிறோம். எங்களுக்கு உதவி தேவையில்லை. ஆனால், உங்கள் ஆதரவும் புரிதலுமே எங்களுக்கு அவசியம். நல்ல மக்களும் உலகில் உள்ள நாடுகளும் இந்தியாவும் எங்களுக்கு மிக மிக முக்கியமானது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் அங்கு தங்கி படித்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதுவர் தெரிவித்துள்ளார். அவர்கள் ஏராளமானவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த 17 மாணவர்களும் அடக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments