ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
எல்லைத் தாண்டி மீன் பிடித்தாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அவர்களின் 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்களில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே இரு படகுகளில் 16 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து அவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளுடன் 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மேலும் மூன்று படகுகளை முற்றுகையிட்ட இலங்கை கடற்படையினர் அந்த படகுகளையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் தாக்கியதோடு சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளது அப்பகுதி மீனவர்களிடையே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
No comments