• Breaking News

    மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்

     


    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டு விழாவாக இந்த ஆண்டு பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


    மதுரை நத்தம் சாலையில் கடந்தாண்டு துவங்கப்பட்டு சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில், நூலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கலைஞரின் உருவ சிலையை முதல்வர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து, நூலகத்தை சுற்றி  பார்வையிட்டு வருகிறார். இந்த திறப்பு விழாவில் எச்.சி.எல் நிறுவனர் சிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். முதல்வர் திறந்து வைத்துள்ள இந்த நூலகம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.


    நூலகத்தின் கீழ் தலத்தில் குழந்தைகளுக்கு என தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவிற்கு பரப்பளவு கொண்டது. நூலகத்தில் தற்போது 3.5 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.


    குழந்தைகள் உலகம், அறிவியல் கருவிகள், கலைஞர் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தனி பிரிவுகள் உள்ளன. கலைஞர் நூலகத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை  இடம் பெற்றுள்ளது. தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்களுக்கு என தனி தனி பிரிவுகள் உள்ளன. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பல தலைப்புகளில் 30 ஆயிரம் புத்தகங்களை கொண்ட தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    No comments