வைக்கோலுக்கு இடையே பெட்டி பெட்டியாக வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் இரவு, வேளாங்கண்ணி அருகே செருதூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வைக்கோல் ஏற்றி வந்த லோடு வேனை மரித்து சோதனை செய்தனர். டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், லோடு வண்டியில் ஏறி சோதனை செய்தபோது வைக்கோலுக்கு இடையே பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார், லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள், தலைஞாயிறு சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 35), சந்தோஷ் குமார் (27) ஆகியோர் என்பதும், போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வைக்கோல் ஏற்றிக் செல்வது போல காரைக்காலில் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில், கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதை எடுத்து மது பாட்டில்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து, ராமகிருஷ்ணன், சந்தோஷ் குமார் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments