காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் கடத்திய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்,வாகனம் பறிமுதல்.... இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை....
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்திவரப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்படி 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் உள்ளிட்ட அந்தந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் மது பாட்டில்கள் மற்றும் விஷ சாராயத்தினை பறிமுதல் செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நாகை மாவட்ட காவல் துறை தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தளரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
No comments