• Breaking News

    மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

     

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து விமானப்படையின் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். மதுரை விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த அவர், கோயில் முன்பு அமைக்கப்பட்ட தற்காலிக ஓய்வறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை தரிசிக்க கோவிலுக்குள் சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கோவிலுக்குள் வருகை தந்தபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன், அமைச்சர் மனோ தங்கராஜ், கோவில் அறங்காவல் சார்பில் தக்கார் கருமுத்துகண்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், ஆகியோர் வரவேற்றனர். 

    இதனையடுத்து கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோயில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, குடியரசு அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் மரியாதை அளித்தனர். பின்னர், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் குங்குமம் பிரசாதத்துடன் மீனாட்சியம்மன் சிலையும் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துவிட்டு, அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார். 

    முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய குடியரசு தலைவர் முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.

    No comments